தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா அலுவலகத்தில் இருந்து இலங்கைச்சேரி வழியாக ஆதிகுடிக்காடு கிராமம் வரை செல்லும் தார் சாலைக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி கடந்த மாதம் பணியை தொடங்கியது. சாலைகள் பறிக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. சாலையில் பொதுமக்கள் பயணம் செய்ய முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செந்துறை.

போக்குவரத்திற்கு இடையூறான புளியமரம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை திருப்பத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரத்தில் ஒரு புளியமரம் உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், ஜெயங்கொண்டம்.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், அசாவீரன்குடிக் காட்டில் தட்டாங்குறிச்சி என்ற இடத்தில் சாலையோரம் முறையாக வடிகால் வசதி இன்றி சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தட்டாங்குறிச்சி.


Next Story