தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திண்டுக்கல்லில் தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. அங்கு இரு பிரிவினர் இடையே மோதல் உருவாகி வன்முறை நடக்கிறது. அந்த வன்முறைக்கு 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் மார்க்ரெட்மேரி தலைமை தாங்கினார். மேயர் இளமதி, மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவி கவிதாபார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் நாகராஜன், ராஜாமணி, துணை மேயர் ராஜப்பா, வடமதுரை ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், மகளிர் அணி மற்றும் தொண்டர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.