சூதாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க நிர்வாகி கைது


சூதாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க நிர்வாகி கைது
x

ஆரணி போஸ்ட் ஆபீஸ் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

சோழவரம் ஒன்றியம், ஆரணி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாட்ட விளையாட்டு நடப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் நேற்று ஆரணி போலீசார் ஆரணி போஸ்ட் ஆபீஸ் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை சுற்றி வளைத்தனர். அப்போது ஒருவர் தப்பினார். மற்றொருவரை கைது செய்து விசாரித்ததில் அவர் ஆரணி-பேரூர் தி.மு.க துணைச் செயலாளரான செந்தில் குமார் (வயது 39) என்பது தெரிய வந்தது.

இவரது மனைவி பொன்னரசி ஆரணி பேரூராட்சி 13-வது வார்டு உறுப்பினர் ஆவார். செந்தில் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து ஆரணி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆரணி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் பதட்டம் நிலவியது. பின்னர் கைது செய்யப்பட்ட நிலவழகன் என்ற செந்தில் மீது வழக்குப்பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர். பின்னர், அவரது உத்தரவின் பேரில் நிலவழகன் என்ற செந்திலை புழல் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.


Next Story