வரலாற்றை திரித்து பேசக்கூடாது - கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அய்யா வைகுண்டர் தலைமை பதி கண்டனம்


வரலாற்றை திரித்து பேசக்கூடாது - கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அய்யா வைகுண்டர் தலைமை பதி கண்டனம்
x

அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதுபோல் வரலாற்றை திரித்து கவர்னர் பேசியுள்ளார் என்று அடிகளார் பாலபிராஜபதி கூறியுள்ளார்.

கன்னியாகுமரி,

அய்யா வைகுண்டரின் 192 -வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில் அய்யா வைகுண்டர் தோன்றிய காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலம்; சனாதன தர்மத்தை காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார் என பேசியிருந்தார்.

இந்தநிலையில், அய்யா வைகுண்டர் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு, அய்யா வைகுண்டர் தலைமை பதி அடிகளார் பாலபிராஜபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் சுவாமிதோப்பு வைகுண்டர் தலைமை பதி நிர்வாகி பாலபிரஜாபதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

யாருடைய சுயலாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூறக் கூடாது. அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதுபோல் வரலாற்றை திரித்து கவர்னர் பேசி உள்ளார். ஆரிய கோட்பாட்டிற்கு அணி சேர்ப்பதுபோல் கவர்னர் பேசி உள்ளது வருந்தத்தக்கது.

அய்யா வைகுண்டர் குறித்து கவர்னர் புரிந்து பேச வேண்டும். உருவ வழிபாடு, மொழி, பேதம், ஆண், பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் அய்யா வைகுண்டர்.

அய்யா வைகுண்டர் சனாதனத்தை ஆதரித்தவர் என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அய்யா வைகுண்டரை தனதாக்கி கொண்டு பட்டா போடுவதற்காக அவர்கள் பேசுவதை கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story