எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் எடப்பாடி பழனிசாமி மரியாதை...!


எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் எடப்பாடி பழனிசாமி மரியாதை...!
x

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபின் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று அதன் தீர்ப்பு வெளியானது.

அந்த தீர்ப்பில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்" என அறிவித்த ஐகோர்ட்டு பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க நீதிபதி குமரேஷ்பாபு அனுமதி அளித்தார்.

இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு இன்று அறிவிக்கப்பட்டது. அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அவருக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபின் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அதனை தொடர்ந்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திலும் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


Next Story