விஷம் குடித்து வயதான தம்பதி தற்கொலை


விஷம் குடித்து வயதான தம்பதி தற்கொலை
x
தினத்தந்தி 20 July 2023 6:45 PM GMT (Updated: 20 July 2023 6:46 PM GMT)

உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விஷம் குடித்து வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

திருவாரூர்

கோட்டூர்:

உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விஷம் குடித்து வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

வயதான தம்பதி

தஞ்சை அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம்(வயது 78). இவருடைய மனைவி தாயம்மாள்(78). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர், மதுரையில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். வயதான தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

இவர்களுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இருவரும் தங்களது வயது முதிர்வு காரணமாகவும், உதவிக்கு ஆள் இல்லையே என்ற ஏக்கத்துடனும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

வாய்ப்பகுதியில் கட்டி

இந்த நிலையில் சோமசுந்தரத்துக்கு வாய்ப்பகுதியில் சிறிய கட்டி ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு சோமசுந்தரத்தின் வாய்ப்பகுதியில் இருந்த கட்டியை டாக்டர்கள் அகற்றினர்.

அந்த கட்டியை புற்றுநோய் தொடர்பான பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் மனம் உடைந்த சோமசுந்தரம், தனது மனைவி தாயம்மாளை அழைத்துக்கொண்டு வாடகை காரில் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள ஈசனக்குடி கிராமத்தில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.

காரில் விஷம் குடித்தனர்

வரும் வழியில் பெட்டிக்கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கிய சோமசுந்தரம், அதில் விஷம் கலந்துள்ளார். விஷம் கலந்த குளிர்பானத்தை சோமசுந்தரம், தாயம்மாள் ஆகியோர் ஓடும் காரிலேயே வைத்து குடித்துள்ளனர்

பின்னர் அவர்கள் ஈசனக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது தாங்கள் விஷம் குடித்து விட்டதாக உறவினர்களிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். சிறிது நேரத்திலேயே ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்துள்ளனர்.

கணவன், மனைவி சாவு

உடனடியாக அவர்களை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாயம்மாள் உயிரிழந்தார். சிறிது நேரத்தில் சோமசுந்தரமும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரபாண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகம்

உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story