கடலூரில் மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை போலீசார் விசாரணை
கடலூரில் மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் புதுக்குப்பம் நேரு நகரை சேர்ந்தவர் சாம்சன் ரமேஷ் (வயது 54). அரசு பள்ளி ஆசிரியர். இவருடைய மகன் லிவிங்ஸ்டன் ஜெயக்குமார்(29). என்ஜினீயரான இவர் கடந்த 3 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். சற்று உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று சாம்சன் ரமேசும், ஆசிரியையான அவரது மனைவியும் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டனர். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த லிவிங்ஸ்டன் ஜெயக்குமார் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்து விட்டார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் பலத்த காயங்களுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.
போலீசார் விசாரணை
பின்னர் இது பற்றி சாம்சன் ரமேஷ் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிவிங்ஸ்டன் ஜெயக்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் லிவிங்ஸ்டன் ஜெயக்குமார் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.