3 போலி டாக்டர்கள் கைது


3 போலி டாக்டர்கள் கைது
x
தினத்தந்தி 8 April 2023 12:58 PM GMT (Updated: 8 April 2023 4:05 PM GMT)

செய்யாறு, கண்ணமங்கலத்தில் 3 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு, கண்ணமங்கலத்தில் 3 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

புகார்கள்

செய்யாறு மற்றும் வெம்பாக்கம் தாலுகா பகுதிகளில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் பா.முருகேசுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனை டாக்டர் சந்திரன் தலைமையில் ராஜசேகரன், ஆனந்தன் குழுவினர் பிரம்மதேசம், வெம்பாக்கம், மோரணம், தூசி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தனர்.

போலி டாக்டர் கைது

அப்போது பிரம்மதேசம் கிராமத்தில் சுரேஷ்பாபு (வயது 43) என்பவர் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து விசாரணையில், அவர் முறையாக மருத்துவம் படிக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி டாக்டர் சுரேஷ்பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே அத்திமலைப்பட்டு மேட்டுக்குடிசை பகுதியில் செந்தில்குமார் (வயது 42) என்பவரும் வண்ணாங்குளம் கிராமத்தில் பழனிவேலு (40) என்பவரும் மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர் மம்தா கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததற்கான மாத்திரைகள், மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் போலி டாக்டர்கள் 2 பேரையும் ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.


Next Story