6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தர்ணா போராட்டம்


6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தர்ணா போராட்டம்
x

6 வழிச்சாலை பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமதுரையில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரையில் சுமார் 128 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 வழிச்சாலை அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியது. இந்த பணிக்கு ரூ.3,200 கோடியை மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்துக்கு ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், எல்லாபுரம் ஒன்றியத்திலுள்ள சுமார் 15 கிராமங்களில் மூன்று போகம் விளையும் விவசாய நிலங்களை கையகப்படுத்த தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் முற்பட்டது. இப்பணியை மேற்கொள்ள கூடாது என விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனை.

இந்நிலையில், எல்லாபுரம் ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சிக்கும் வடமதுரை ஊராட்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள விளைநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் சமன் படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சம்பத் தலைமையில் புஞ்சை நில விவசாயிகள் சங்க தலைவர் ஸ்ரீராமுலு ரெட்டி, செயலாளர் சசிகுமார், பொருளாளர் குணசேகர் ரெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் விவசாய நிலத்தை சமப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தனர்.

பின்னர், பணி நடைபெற்று கொண்டு இருந்த இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்திரங்களை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். பின்னர், பணி நடைபெற்ற விவசாய நிலத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும், விவசாய நிலங்கள் பாதிக்காத வண்ணம் மாற்றுப்பாதையில் சாலை அமைக்க வேண்டும், பணி ஆணையில் உள்ள விவரங்கள் அடங்கிய பட்டியலை காண்பிக்க வேண்டும், நிலம் கையகப்படுத்த 80 சதவீத விவசாயிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும், மாற்றாக தரிசு நிலங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து ஊத்துக்கோட்டை துணை-போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் 100-க்கான போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில், சுமூக தீர்வு கிடைக்கவில்லை. இதனால், தாசில்தார் லியோ போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதிலும், சுமூக தீர்வு கிடைக்கவில்லை. எனவே, விவசாயிகள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதன்பின்னர், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய தாசில்தார் ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் கூறினர். இதன் பின்னர் தாசில்தார் ஆறு வழிச்சாலை சம்பந்தமாக சமாதான கூட்டம் ஒன்று நடத்தப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர், அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.


Next Story