உதவித்தொகை பெறும் விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் 31-ந் தேதி கடைசி நாள்


உதவித்தொகை பெறும் விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்  31-ந் தேதி கடைசி நாள்
x

விவசாயிகள்

ஈரோடு

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 95 ஆயிரத்து 354 விவசாயிகள் பயன் பெற்று வருகிறார்கள். 4 மாதங்களுக்கு ஒரு முறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகையை விவசாயிகள் இடுபொருட்கள் வாங்குதல் போன்ற வேளாண்மை பணிக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இதுவரை 11 தவணை தொகை வழங்கப்பட்டு உள்ளன. தற்போது நிதி விடுவிப்பு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. 12-வது தவணை தொகை, அவர்களது ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும். எனவே விவசாயிகள் பி.எம். கிசான் வலைதளத்தில் தங்கள் ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். வங்கி கணக்குடன் ஆதார் எண்ணையும், ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணையும் இணைக்க வேண்டும்.

விவசாயிகள் www.pmkisan.gov.in என்ற தளத்தில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. எண் மூலமாக உள்நுழைய வேண்டும். அதன்பிறகு ஆதார் விவரங்களை பதிவு செய்யலாம். இந்த பணிகளை வருகிற 31-ந் தேதிக்குள் புதுப்பித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு உறுதி செய்பவர்களுக்கு அடுத்த தவணை தொகை விடுவிக்கப்படும்.

இந்த தகவலை ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி தெரிவித்து உள்ளார்.


Next Story