வடபாதிமங்கலத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்படுமா?- விவசாயிகள்


வடபாதிமங்கலத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்படுமா?- விவசாயிகள்
x
தினத்தந்தி 1 Dec 2022 7:00 PM GMT (Updated: 1 Dec 2022 7:01 PM GMT)

மழைக்காலத்தில் நோய்கள் பரவி வருவதால் வடபாதிமங்கலத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

மழைக்காலத்தில் நோய்கள் பரவி வருவதால் வடபாதிமங்கலத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

விவசாயம் சார்ந்த பகுதி

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு வசிக்கும் விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினர் மாடு, ஆடு போன்ற கால்நடைகளை வளர்த்து வாழ்வாதாரத்தை பெருக்கி வருகிறார்கள்.

மாடுகள் தரும் பாலை விற்று குடும்ப செலவுகளை கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலத்தில் கடுமையான மழை பெய்தது. இதனையடுத்து தற்போது கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது.

இறந்து போக வாய்ப்பு

இதனால் ஆடு, மாடுகளுக்கு உடல் நலக்கோளாறு ஏற்படுகிறது. அவை மூச்சுத்திணறல் போன்ற நோய்களால் அவதிப்படுவதால், சரியாக மேய்ச்சலுக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றன. ஆனால் கால்நடைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் வடபாதிமங்கலத்தில் கால்நடை ஆஸ்பத்திரி இல்லை.

இதனால் நோயின் தன்மை அதிகரித்து கால்நடைகள் இறந்து போக வாய்ப்பு உள்ளதாக கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மருத்துவ முகாம்

எனவே வடபாதிமங்கலத்தை மையமாக கொண்டு ஒரு இடத்தை தேர்வு செய்து, அந்த இடத்தில் வாரத்தில் 2 நாட்கள் கால்நடை மருத்துவ முகாம் நடத்த ேவண்டும். உடல் பலவீனம், குடற்புழுவால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மற்றும் மழை, பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க தடுப்பூசி போட வேண்டும். மருந்துகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story