நடுக்கடலில் படகு பழுதாகி தவித்த ராமேசுவரம் மீனவர்கள்


நடுக்கடலில் படகு பழுதாகி தவித்த ராமேசுவரம் மீனவர்கள்
x

படகு பழுதாகி நடுக்கடலில் தவித்த ராமேசுவரத்தை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

படகு பழுதாகி நடுக்கடலில் தவித்த ராமேசுவரத்தை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

ரோந்து

ராமேசுவரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை கரை திரும்பினர். இதன் இடையே ராமேசுவரத்தில் இருந்து சேகர் பாண்டி என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் மீனவர்கள் அலெக்சாண்டர்(வயது 35), அந்தோணி(38), சரவணன்(38), முருகன் (40), சுப்பையா(35), சசி(38) ஆகிய 6 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த படகு நேற்றுமுன்தினம் இரவு தனுஷ்கோடி அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் பழுதாகி நின்றது. இதன் இடையே நேற்று காலை வரை இந்த படகு மற்றும் மீனவர்கள் கரை திரும்பாததால் இந்த மீனவர்களை தேடி ஒரு படகில் 5 மீனவர்கள் தேடி சென்றனர். அப்போது பழுதாகி நின்ற ராமேசுவரத்தை சேர்ந்த படகு மற்றும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலில் கயிறு கட்டி இழுத்து வந்து தேடிச்சென்ற ராமேசுவரம் மீனவர்களிடம் ஒப்படைத்தனர்.

ஒப்படைப்பு

பின்னர் பழுதாகி நின்ற படகு மற்றும் 6 மீனவர்களையும் தேடி சென்ற மீனவர்கள் மீட்டு நேற்று மாலை கரைக்கு அழைத்து வந்தனர். இதுபற்றி படகு உரிமையாளர் சேகர்பாண்டி கூறியதாவது:- தனுஷ்கோடி அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு பழுதாகி இந்திய கடல் பகுதிக்குள் நின்றது. கடல் நீரோட்டம் மற்றும் காற்றின் வேகத்தால் படகானது இலங்கை கடல் பகுதிக்குள் சென்றது. நேற்று அதிகாலை அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகு மற்றும் மீனவர்களை மீட்டு பாதுகாப்பாக ராமேசுவரம் மீனவர்களிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். மனிதாபிமானத்துடன் 6 மீனவர்களை காப்பாற்றி படகுடன் திருப்பி அனுப்பி வைத்த இலங்கை கடற்படைக்கு மிக்க நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மகிழ்ச்சி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் படகு பழுதாகி இலங்கை கடல் பகுதிக்குள் நின்ற ராமேசுவரத்தை சேர்ந்த 6 மீனவர்களை படகுடன் மீட்டு இலங்கை கடற்படை திருப்பி அனுப்பி வைத்துள்ள சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story