கால்பந்து வீராங்கனை கால் இழப்பு: தவறான சிகிச்சையால் பாதிப்பு என்ற கருத்தை பரப்புகின்றனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கால்பந்து வீராங்கனை கால் இழப்பு பற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட கால்பந்து வீராங்கனை மாணவிக்கு சரியான மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக தான் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு, கல்லூரி மாணவியை அனுப்பி வைத்ததாக மருத்துவமனை அதிகாரிகள் என்னிடம் கூறினர்.
அரசு மருத்துவமனைகளில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், தவறான சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டதாக கருத்துக்களை பரப்புகின்றனர். இது சரியானது அல்ல.
மருத்துவர்கள் ஆத்மார்த்தமாகத்தான் பணியாற்றுவார்கள். யாரையும் பாதிக்கும் விதத்தில் பணியாற்ற மாட்டார்கள். இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகாரையும் ஒதுக்கி தள்ளாமல், அதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.