பழைய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கம்


பழைய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 9 Aug 2023 6:45 PM GMT (Updated: 9 Aug 2023 6:47 PM GMT)

ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட உள்ள நிலையில் புதிய பஸ்நிலையம் முழுமையாக மூடப்பட்டு அனைத்து பஸ்களும் பழைய பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட உள்ள நிலையில் புதிய பஸ்நிலையம் முழுமையாக மூடப்பட்டு அனைத்து பஸ்களும் பழைய பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

புதிய பஸ் நிலைய பணி

ராமநாதபுரம் மக்களின் தேவை கருதி புதிய பஸ்நிலையத்தை விரிவாக்கம் செய்து ரூ.20 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய பஸ்நிலையத்தில் இருந்து கட்டிடங்கள் அகற்றப்பட்டு ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளன. இந்த பஸ்நிலையத்திற்கு மாற்றாக சந்தை திடல் பகுதியில் இருந்து மதுரை உள்ளிட்ட வெளியூர் பஸ்கள் சென்று வந்தன. ராமநாதபுரம் பழைய பஸ்நிலையத்தில் இருந்து ராமேசுவரம், கீழக்கரை, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கான பஸ்கள் சென்று வந்தன.

இந்நிலையில் புதிய நவீன பஸ்நிலைய கட்டிட வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்ததாரர் பூமிபூஜை போட்டு பணிகளை தொடங்கி உள்ளார். புதிய பஸ்நிலையம் 4.1 ஏக்கர் பரப்பளவில் 35 பஸ்கள் ஒரே நேரத்தில் நின்று செல்லும் வகையில் அமைவதோடு, மக்கள் வசதிக்காக 92 கடைகள் அமைக்கப்படுகிறது. 231 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், கார்கள் வந்து பயணிகளை இறக்கி விட்டு செல்ல அணுகு சாலையும் அமைக்கப்பட உள்ளது.

பஸ்கள் இயக்கம்

இந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதால் பணிகள் இரவு, பகலாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் புதிய பஸ்நிலையம் அருகில் சந்தை திடல் பகுதியில் இருந்து சென்று வந்த பஸ்களை பழைய பஸ்நிலையத்தில் இருந்தே இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதிய பஸ்நிலைய பகுதி, சந்தை திடல் பகுதி முழுவரும் அடைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.

மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மூலக்கொத்தளம் பகுதியில் இருந்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்த நிலையில் அதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பழைய பஸ்நிலையத்தில் இருந்தே இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய பஸ்நிலையம் சிறியதாக உள்ளதால் பஸ்களை நிறுத்தாமல் வந்தவுடன் பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story