தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
எரியோடு அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
எரியோடு அருகே உள்ள அச்சனம்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி ரஞ்சிதா (வயது 28). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தருணீஷ் (4) என்ற மகன் உள்ளார்.
அருண்குமார் தண்ணீர்பந்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் தொழில்சாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களாக அவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதன்பின் அவர்கள் தூங்க சென்றனர். இதில் மனமுடைந்த ரஞ்சிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சிதாவுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆவதால் பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமாரும் விசாரணை நடத்தி வருகிறார்.