டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு: திருப்பத்தூர் சிவராஜ்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கலெக்டர் உத்தரவு


டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு: திருப்பத்தூர் சிவராஜ்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கலெக்டர் உத்தரவு
x

சிவராஜ்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(45) மற்றும் சுமித்ரா(35) ஆகிய தம்பதியினருக்கு பிரித்திகா(15), தாரணி(13), யோகலட்சுமி(7), அபிநிதி(4) மற்றும் ஒரு 8 மாத கைக்குழந்தை என 5 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநிதி மற்றும் 8 மாத கைக்குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 23-ந் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் யோகலட்சுமி மட்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலிருந்து தற்போது பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அபிநிதியும், 8 மாத கைக்குழந்தையும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26-ந் தேதி மேல் சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சிறுமி அபிநிதி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் உயிரிழந்த சிறுமியின் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் சிவராஜ்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அந்த பகுதியில் டெங்கு பரவலை தடுக்க வீடு வீடாகச் சென்று கொசுப்புழு உற்பத்தி ஏற்படும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதையும் ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.




Next Story