குளிக்க சென்ற சிறுமி: பாலியல் வன்கொடுமை செய்து கொலை - நாடகமாடிய பெரியப்பா கைது


குளிக்க சென்ற சிறுமி: பாலியல் வன்கொடுமை செய்து கொலை - நாடகமாடிய பெரியப்பா கைது
x
தினத்தந்தி 24 March 2024 9:45 PM GMT (Updated: 24 March 2024 9:46 PM GMT)

போலீசார் விசாரணையில் பெரியப்பா அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

மதுரை,

புதுச்சேரியை போன்று மதுரையிலும் சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குளியலறையில் மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய வளர்ப்பு பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று, உடலை கால்வாயில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோன்று மதுரையிலும் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை கூடல்புதூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவள் 6 மாத குழந்தையாக இருக்கும்போது அவளது தாய் இறந்து விட்டார். இதனால் அவளது தந்தை வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். இதனால் சிறுமி மற்றும் அவளது அண்ணனை அவர்களது பெரியம்மா எடுத்து வளர்த்து வந்தார். இதற்கிடையே, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் அண்ணன் கண்மாயில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி இறந்து விட்டார். இதனை தொடர்ந்து, சிறுமியை மட்டும் அவரது பெரியம்மா வளர்த்து வந்தார்.

இந்தநிலையில், சம்பவத்தன்று மாலையில் சிறுமி குளிப்பதற்காக வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்றபோது பல மணி நேரம் ஆகியும் வெளியே வரவில்லை என சிறுமியின் பெரியப்பா, பெரியம்மா அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு சிறுமி மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடப்பதை கண்டனர். உடனே சிறுமியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சிறுமியை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், சிறுமியின் கழுத்தில் காயம் இருப்பதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து சந்தேகத்தின்பேரில், சிறுமியின் பெரியம்மா மற்றும் பெரியப்பா ஆகியோரை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

மேலும் போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சம்பவத்தன்று பெரியப்பா அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதில் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளாள். இதற்கு அவருடைய பெரியம்மா உடந்தையாக இருந்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் குளியலறையில் சிறுமி தவறி விழுந்து இறந்து விட்டார் என நாடகமாடி உள்ளனர். இருவரிடமும் நடத்திய தொடர் விசாரணையில் அவர்கள் சிறுமி கொலை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.


Next Story