அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை, மே.26-
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும், அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பயன் பெறும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் நேற்று மாலை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேசிங்குராஜன் தலைமை தாங்கி பேசுகையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.
இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் நடராஜ், மூர்த்தி, மோகன்தாஸ், சந்திரசேகர், சுகன்யா, சசீந்தரன், சின்னையசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.