கழிவுகளை அகற்ற கோரிய வழக்கில் பதில் அளிக்க அரசுக்கு அவகாசம்


கழிவுகளை அகற்ற கோரிய வழக்கில் பதில் அளிக்க அரசுக்கு அவகாசம்
x

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கழிவுகளை அகற்ற கோரிய வழக்கில் பதில் அளிக்க அரசுக்கு அவகாசம் அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மேலாளர் சுமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனம் உரிய அனுமதியை பெற்று தொடங்கப்பட்டது. மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு இந்த நிறுவனம் மூடப்பட்டது. மேலும் இந்த நிறுவனத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு அவசர கால நிலையைக்கூட செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.

அங்கு திராவகம், ரசாயனம் மற்றும் ஆபத்தான பல மூலப்பொருட்கள் உள்ளன. அவசர கால நிலைக்கு குறைந்த அளவு மின்சாரம் வழங்கக்கோரி அளித்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா 2-வது அலையின் போது மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. இதற்காக உள்ளூர் உயர்மட்டக்குழு அனுமதி பெற்று 250 ஊழியர்கள் பணியாற்றினர்.

எனவே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக பயன்படுத்திய எண்ணெய், மூலப்பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றையும், ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்ற அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் உரிய பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.


Next Story