கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த அரசு மருத்துவம்-பொது சுகாதாரத்துறை கூட்டமைப்பினர்


கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த அரசு மருத்துவம்-பொது சுகாதாரத்துறை கூட்டமைப்பினர்
x

அரசு மருத்துவம்-பொது சுகாதாரத்துறை கூட்டமைப்பினர் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணியாற்றும் அனைத்து பிரிவு ஊழியர்களும் தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு தெரிவிக்கும் வகையில் நேற்றும், இன்றும்(புதன்கிழமை) கோரிக்கை அட்டைகளை அணிந்து, மக்களுக்கான மருத்துவ சேவைகள் பாதிக்காமல் பணிபுரிகின்றனர்.

அதன்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் புற ஆதார முறைகளை களைய வேண்டும். 30 ஆண்டுகள் கடந்தும் பதவி உயர்வின்றி பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். இன்றும் அவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிகின்றனர். நாளை(வியாழக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட கலெக்டர் வழியாக முதல்-அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட 4 துறை இயக்குனர்களுக்கும் கோரிக்கை முறையீட்டு மனுவினை வழங்க உள்ளனர்.


Next Story