இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் திருப்பத்தூரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

விபத்தில் சாவு

ஜோலார்பேட்டை அருகே உள்ள ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன். பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜோலார்பேட்டை நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது வேலுர் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதி கதிரவன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து அவரது மனைவி இந்திரா கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அரசு பஸ் ஜப்தி

மேலும் இதுதொடர்பாக திருப்பத்துர் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் வழக்கு நடந்தது. அதில் அரசு போக்குவரத்து கழகம் கதிரவன் குடும்பத்துக்கு இழப்பீடு தொகையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது. ஆனால் அதன்படி இழப்பீடு தொகை வழங்கவில்லை.

இது குறித்து மீண்டும் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதந்பேரில் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மீனா குமாரி நேற்று அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி கோர்ட்டு அமீனா மற்றும் வழக்கறிஞர் திருப்பத்துர் பஸ் நிலையத்தில் நின்றிருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்தனர். இதனால் பஸ்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story