ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா? வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து


ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா? வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து
x

ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா? என்பது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர்

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு தலைவர் தெரிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா? என்பது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி.

வரி விதிப்பு என்பது மன்னர் காலத்தில் இருந்தே தொன்றுதொட்டு வருகிறது. மக்கள் செலுத்தும் வரி மட்டும் இல்லை என்றால், அரசுகள் செயல்படமுடியாது. வரிகளின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்தே அரசுகள் மக்கள் நலனுக்கான திட்டங்களை தீட்டி, செயல்படுத்துகின்றன. வரிகளை பொறுத்தமட்டிலும், நேரடி வரி மற்றும் மறைமுக வரி என்ற 2 பிரிவுகள் உள்ளன. அந்தவகையில், சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. மறைமுக வரியாகும். ஜி.எஸ்.டி. வரி முறையை உலகிலேயே முதலாவதாக 1954-ம் ஆண்டு பிரான்சு நாடு அறிமுகப்படுத்தியது.

தற்போது அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மியான்மர் உள்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜி.எஸ்.டி. வரி நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தமட்டில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 'ஒரே நாடு, ஒரே வரி' என்ற தலைப்பில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தது. மத்திய கலால் வரி, கூடுதல் சுங்க வரி, சேவை வரி, பொழுதுப்போக்கு வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்பட வரிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட வரியாக ஜி.எஸ்.டி. இருக்கிறது.

ஒரே வரி விகிதம்

நாடு முழுவதும், மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. ஒரே மாநிலத்துக்குள் நடைபெறும் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் அதாவது மத்திய ஜி.எஸ்.டி. (சி.ஜி.எஸ்.டி.) மத்திய அரசாலும், மாநில ஜி.எஸ்.டி. (எஸ்.ஜி.எஸ்.டி.) மாநில அரசினாலும் விதிக்கப்படுகிறது. அதன் வருவாயை மத்திய-மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. மாநிலங்களுக்கிடையே நடைபெறும் பரிவர்த்தனைகள் மற்றும் சரக்கு அல்லது சேவை இறக்குமதிக்கு, ஒருங்கினைந்த ஜிஎஸ்டி (ஐ.ஜி.எஸ்.டி.) மத்திய அரசினால் விதிக்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி.யை பொறுத்தமட்டில், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகிய 4 நிலைகளில்(சிலாப்ஸ்) வரி விதிக்கப்படுகிறது. தற்போதைய வரி விதிப்பு முறை என்பது, சேவை துறைகளுக்கு கட்டுமான உருவாக்கத்துக்கான நிதி தேவையை பூர்த்தி செய்ய இயலாத அளவுக்கு இருப்பதால், ஜி.எஸ்.டி.யில் ஒரே நிலையில் அதாவது விலக்கு எதுவும் இல்லாமல் ஒரே விகிதத்தில்(ஒரே சிலாப்) வரி விதிப்பினை கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் பிபேக் தேப்ராய் சமீபத்தில் தெரிவித்து இருக்கிறார்.

சாத்தியமா?

ஜி.எஸ்.டி. என்பது 'ஒரே நாடு ஒரே வரி' என்ற அடிப்படையில் உருவானது. நாடு முழுவதும் ஒரே சீராக விதிக்கப்படும் அதில், வரி விகிதங்களில் சில பிரிவுகள் இருக்கின்றன. பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவரின் கருத்து ஏற்கப்பட்டால், 'ஒரே நாடு ஒரே வரி' என்ற நிலையில் இருந்து 'ஒரே நாடு, ஒரே வரி, ஒரே வரி விகிதம்' என்ற நிலைக்கு ஜி.எஸ்.டி. மாறிவிடும். 'ஒரே ஜி.எஸ்.டி., ஒரே வரி' என்ற முன்மொழிவு சாத்தியமா? என்பது குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரே விகிதமாக இருக்க வேண்டும்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில கூடுதல் செயலாளர் சண்முகநாதன்:- மத்திய-மாநில அரசுகளின் சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏற்கனவே பொதுமக்கள், வணிகர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஒவ்வொரு விற்பனை பொருட்களுக்கும் வெவ்வேறு விகிதாச்சார அளவில் விதிக்கப்பட்டு வருகிறது. அதனை ஒரே விகிதமாக விதிக்கப்பட்டு வசூலிக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கை ஆகும். ரூ.50 லட்சம் வரை வணிகம் செய்யும் ஜி.எஸ்.டி. பதிவு பெற்ற வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். உணவு பொருட்கள் அனைத்துக்கும் மற்றும் வெள்ளி நகைகளுக்கும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஜி.எஸ்.டி. தொகுப்பு சலுகை எனப்படும் காம்போசிஷன் ஸ்கீம் பெறுவதற்கான வரம்பு ரூ.1.5 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தினால் சிறு, குறு வணிகர்கள் இன்னும் மகிழ்ச்சி அடைவார்கள்.

10 சதவீதத்திற்கு கீழ் வரி

சிறுவாச்சூரை சேர்ந்த என்ஜினீயர் தமிழரசன்:- ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் கட்டுமான பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் புதிதாக வீடு கட்ட பயப்படுகிறார்கள். ஏற்கனவே அரசாங்கம் மக்கள் வரிப்பணத்தில் தான் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மக்களிடம் இருந்து கூடுதலாக வருமானம் அரசாங்கத்துக்கு கிடைத்து கொண்டிருக்கிறது. வணிக நிறுவனங்கள் கட்டிய ஜி.எஸ்.டி. வரியை திரும்பப்பெற்று கொள்ள வழி இருக்கிறது. ஆனால் பாமர, நடுத்தர மக்கள் ஜி.எஸ்.டி. வரி கட்டுவதால் என்ன பயன். இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆடம்பரமாக வாழ்பவர்களுக்கு இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பு சரியானது. உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தற்போதைய பல்வேறு விகித அளவு ஜி.எஸ்.டி. வரியை ஒரே விகித அளவாக விதிக்க வேண்டும். அதையும் 10 சதவீதத்துக்கு கீழ் ஜி.எஸ்.டி. வரியை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைக்க வேண்டும்

ஓட்டல் உரிமையாளர் ராமலிங்கம்:- வரியை வியாபாரிகள் மனமுவந்து செலுத்த வேண்டும். அந்த சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். 5 சதவீத வரி விதிப்பு என்றால் எல்லோருக்கும் நியாயமானதாக இருக்கும். எனவே அதனை ஒரே விகிதமாக அனைத்து பொருட்களுக்கும் விதிக்க வேண்டும். வரிவிதிப்பு குறையும்போது பொருட்களின் விலையும் குறையும். வரி அதிகமாக இருக்கும்போது மக்களை பாதிக்கிறது. எனவே அதனை தவிர்க்க வரியை குறைத்து, ஒரே விகித அளவாக ஜி.எஸ்.டி. இருக்க வேண்டும்.

தேவையற்றது

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கணக்காய்வர் சச்சிதானந்தம்:- தற்போது அரசு விதித்திருக்கும் விகிதாச்சார வரிவிதிப்பு என்பது சரியானதே. மேலும் ஒரே விகிதமாக வரி விதிப்பு செய்ய வேண்டும் என்பது தேவையற்ற ஒன்றாகும். அவ்வாறு செய்தால் அதில் அதிகமாக பயன்பெறுவது பெரும் முதலாளிகளாகத்தான் இருக்கும். பொதுமக்கள் தேவையான அத்தியாவசிய மற்றும் உணவுப் பொருட்களை நேரடியாக விவசாயிகளிடம் இருந்தோ அல்லது உற்பத்தியாளர்களிடம் இருந்தோ அல்லது சிறு வியாபாரிகளிடம் இருந்தோ வாங்கும்போது அவற்றுக்கு எந்த வரிவிதிப்பும் செய்யப்படுவதில்லை. எனவே ஒரே மாதிரியான வரி விதிப்பு என்பது தேவையற்றது என்பதே எனது கருத்தாகும்.

அவசியமானது

தா.பழூரை சேர்ந்த சக்திவேலன்:- வாட் வரி அறிமுகப்படுத்துவதற்கு முன்பு வரை பொதுமக்கள் பயன்படுத்தும் வணிக ரீதியான அனைத்து பொருட்களுக்கும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கப்பட்டிருந்தது. வாட் வரி அறிமுகப்படுத்தப்பட்டபோதும் சில பொருட்கள் தவிர மீதமுள்ள அனைத்து பொருட்களுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு வெவ்வேறு பொருட்களுக்கு வெவ்வேறு விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது. இது விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணமாகவும் அமைகிறது. எனவே நாடு முழுவதும் அனைத்து பொருட்களுக்கும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது அவசியமானது. அதைவிட முக்கியமாக பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல், டீசல் விலையும் கட்டுக்குள் இருக்கும். அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கணிசமாக குறையும். நிச்சயம் இவற்றை அரசு பரிசீலிக்க வேண்டும்.


Next Story