தங்கக்கவசத்தை வருவாய் அதிகாரிகள், நினைவாலய பொறுப்பாளரிடம் ஒப்படையுங்கள்


தங்கக்கவசத்தை வருவாய் அதிகாரிகள், நினைவாலய பொறுப்பாளரிடம் ஒப்படையுங்கள்
x

தேவர் சிலைக்கு அணிவிக்கும் தங்கக்கவசத்தை வருவாய் அதிகாரிகள், நினைவாலய பொறுப்பாளர் ஆகியோர் பெற்றுக்கொள்ளலாம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை

தேவர் சிலைக்கு அணிவிக்கும் தங்கக்கவசத்தை வருவாய் அதிகாரிகள், நினைவாலய பொறுப்பாளர் ஆகியோர் பெற்றுக்கொள்ளலாம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தேவரின் தங்கக்கவசம்

அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு 2014-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 13 கிலோ தங்கக்கவசத்தை வழங்கினார். இதை மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் அ.தி.மு.க. மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் ஆகியோரின் பெயரில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜைக்கு 3 நாட்களுக்கு முன்பு தங்கக்கவசத்தை வங்கியில் இருந்து எடுத்துச் சென்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அணிவித்து பின் மீண்டும் வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம்.

இதற்காக அ.தி.மு.க. பொருளாளரும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்திட்டு தங்கக்கவசத்தை பெற்றுச்செல்வார்கள். தற்போது அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தங்கக்கவசத்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் தற்போதைய அ.தி.மு.க. பொருளாளராக உள்ள எனக்குத்தான் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து பெறும் அதிகாரம் உள்ளது. எனவே முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையையொட்டி தங்கக்கவசத்தை எங்களிடம் ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆட்சேபம்

ஏற்கனவே இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பினரிடம் தங்க கவசத்தை வழங்கக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்தனர். அதேபோல சீனிவாசன் தரப்பினர் தங்களிடம் தங்கக்கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என்று வாதாடினர்.

இந்த நிலையில் இந்த வழக்கு அதே நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வங்கி தரப்பிலும், தேவர் நினைவாலய பொறுப்பாளர் தரப்பிலும், கோர்ட்டின் உத்தரவை பின்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டது.

வருவாய் அதிகாரிகளுக்கு உத்தரவு

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

அ.தி.மு.க.வின் ஏ மற்றும் பி தரப்பில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் தங்கக்கவசத்தை அவர்கள் தரப்பில் வழங்குமாறு உத்தரவிட முடியாது. இந்த வழக்கில் மதுரை மாவட்ட வருவாய் அதிகாரி, ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோரை இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது.

அவர்களும், தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்து போட்டு தங்கக்கவசத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். தங்கக்கவசத்தை பசும்பொன் கொண்டு செல்வதற்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். விழா முடிந்த பின்பு மீண்டும் தங்கக்கவசத்தை அதிகாரிகளும், நினைவாலய பொறுப்பாளர் ஆகியோர் வங்கியில் செலுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மாவட்ட வருவாய் அலுவலரிடம் தங்கக்கவசம் ஒப்படைப்பு

மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருக்கு அணிவிக்கப்படும் தங்கக்கவசத்தை மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கியில் இருந்து மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த தங்கக்கவசத்தை விழா குழுவினரிடம் அவர் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து விழாக்குழுவினர் தங்கக்கவசத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன்னுக்கு கொண்டு சென்றனர்.


Next Story