ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்


ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:47 PM GMT)

மயிலாடுதுறையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

மயிலாடுதுறையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக கலெக்டர் பேசுகையில், இரு சக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணிப்பவர்கள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும். இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணிக்ககூடாது. இந்திய தர நிர்ணய சான்று இல்லாத சாதாரண ஹெல்மெட்டுகளை பயன்படுத்தக்கூடாது. சாதாரண தலைக்கவசங்கள் விபத்தின் போது பயனளிக்காது. அதுவே தலைக்காயங்களை அதிகப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

துண்டு பிரசுரம் வினியோகம்

உங்கள் தலையின் அளவிற்கு பொருத்தமான அளவில் தலைக்கவசத்தை தேர்வு செய்ய வேண்டும். தலைக்கவசத்தின் முழு பயனையும் பெற எப்போதும் கழுத்துப்பட்டையை அணிந்திருக்க வேண்டும் என்றார். முன்னதாக தலைக்கவசம் அணியாமல் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிய வலியுறுத்தியும், சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கலந்து கொண்டனர்.


Next Story