ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு  குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
x

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

தர்மபுரி

பென்னாகரம்:

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலம் குடகு, பாகமண்டலா, மடிக்கேரி பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கனமழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் உபரிநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் வினாடிக்கு 44 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்சட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் தொட்டெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக காவிரி கரையோர பகுதியினை ஒட்டியுள்ள வனப்பகுதிகளான உன்சன அள்ளி, உரிகம், ஹன்சனள்ளி பள்ளம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

நடைபாதை மூழ்கின

இதைத்தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளப்ெ்பருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீர்வரத்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1.40 லட்சம் கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த ஆண்டில் 2-வது முறையாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐவர்பாணி, ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி, பெரிய பாணி, உள்ளிட்ட அருவிகள், நடைபாதை, மாமரத்து கடவு, பரிசல் துறை உள்ளிட்டவை வெள்ளநீரில் மூழ்கின. ஒகேனக்கல் அருவிகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தடை நீடிப்பு

இந்த வெள்ளப்பெருக்கால் கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் பொதுமக்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி கரையோர பகுதிகளான ஆலம்பாடி, ஊட்டமலை, பிரதான அருவி, நாகர்கோவில், முதலைப்பண்ணை, பிரதான அருவி செல்லும் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தொடர்ந்து தடை நீடிக்கிறது.


Next Story