தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஓட்டல் அதிபர் தற்கொலை


தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஓட்டல் அதிபர் தற்கொலை
x

கொரோனா காலத்தில் ஓட்டல் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பலரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் ஓட்டல் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆதம்பாக்கம்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் வெள்ளாளர் தெருவில் வசித்தவர் சுப்புராயலு (வயது 60). இவர், ஆதம்பாக்கம் பழண்டியம்மன் கோவில் தெருவில் சைவ ஓட்டலும், மேற்கு கரிகாலன் தெருவில் அசைவ ஓட்டலும் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் சுப்ராயலு, திடீரென எலி மருந்தை சாப்பிட்டு விட்டு தனது மனைவிக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், சுப்புராயலுவை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்புராயலு பரிதாபமாக உயிரிழந்தார்.

தொழிலில் நஷ்டம்

இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கொரோனா காலத்தில் ஓட்டல் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சுப்புராயலு பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியாமல் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் அவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story