ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய கடுமையாக உழைப்பேன் எடப்பாடி பழனிசாமி அறிக்கை


ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய கடுமையாக உழைப்பேன் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
x

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி என்றும், ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய கடுமையாக உழைப்பேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க.வின் நாடி நரம்புகளான, ரத்தத்தின் ரத்தமான, ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றியை தெரிவித்து, வணங்குகிறேன். பொன்விழா ஆண்டில் வீறுநடை போடும் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக கடந்த 11-ந்தேதி நடந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் என்னை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களில் ஒருவனாக கிளை செயலாளர் பொறுப்பில் தொடங்கி, 48 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வரும் என்னை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு பின், இந்த மாபெரும் இயக்கத்துக்கு தலைமை தாங்கி வழிநடத்தும்படி பணித்த உங்கள் அனைவரின் அன்பிற்கு நன்றி தெரிவிப்பதோடு, நீங்கள் இடும் கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளேன்.

வெற்றி பாதை

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் சாதிக்க முடியாத பல அரிய சாதனைகளை புரிந்து, பல்வேறு வெற்றிகளையும், விருதுகளையும் பெற்று, பெருமைமிகு மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய பெருமை அ.தி.மு.க.வையே சாரும். தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆற்றிய அரும்பணிகள், எடுத்த துணிச்சலான முடிவுகள், உன்னதமான மக்கள் நலப்பணிகள் ஆகிய அனைத்தும் தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நம் இருபெரும் தலைவர்கள் அமைத்துதந்த பாதையில், இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு வெற்றி பாதையில் அழைத்து செல்வேன் என்ற உறுதியை அளிக்கிறேன்.

மீண்டும் ஜெயலலிதா ஆட்சி

அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், கட்சியினரின் மேன்மைக்கும், தமிழக மக்களின் நல்வாழ்வுக்கும், சாதி-மத பேதமின்றி, விருப்பு-வெறுப்புகளுக்கு இடமின்றி என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்காகவே உழைப்பேன் என்று மனதார உறுதி கூறுகிறேன்.

''எனக்கு பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்'' என்று முதல்-அமைச்சராக, சட்டமன்றத்தில் ஜெயலலிதா ஆற்றிய சிங்க கர்ஜனை உரை நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

ஜெயலலிதாவின் எண்ண ஓட்டத்தை நினைவாக்கும் வகையில், மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்திட கடுமையாக உழைப்பேன், உழைப்பேன். இதுவே எனது லட்சியம். இந்த லட்சியத்துக்கு நீங்கள் அனைவரும் துணை நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, தமிழகத்தின் தீய சக்திகளை வேரோடு ஒழித்து, வெகு விரைவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியோடு, அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர்வதற்கு பொன்விழா ஆண்டில் சபதம் ஏற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story