பெரம்பலூர், வேப்பந்தட்டை அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் நாளை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு


பெரம்பலூர், வேப்பந்தட்டை அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில்  நாளை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
x

பெரம்பலூர், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

பெரம்பலூர்

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெறுகிறது. அதன்படி நாளை காலை 10 மணிக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டிற்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து பாடப்பிரிவுகளுக்கான முதல் கட்ட பொது கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் தங்கள் இணையவழியில் விண்ணப்பித்த விண்ணப்பம், மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 எடுத்து கொண்டு தங்களது பெற்றோருடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வில் தேர்வு பெற்றவர்கள் சேர்க்கை கட்டணத்தை அன்றே கல்லூரி அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று கல்லூரி முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.

சான்றிதழ்கள்

இதேபோல் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பி.எஸ்சி கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவுகளில் சேர கலந்தாய்வு நடைபெறுகிறது. இதையடுத்து, வருகிற 8-ந் தேதி காலை 10 மணியளவில் பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், பி.காம், பி.பி.ஏ. ஆகிய படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ளக்கூடிய மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல்கள், பாஸ்போர்ட் அளவு போட்டோ-5 ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் சிவனேசன் தெரிவித்து உள்ளார்.


Next Story