மருத்துவ மேற்படிப்பில்; நீரிழிவு சிறப்பு பாடத்தை சேர்க்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் -அமைச்சர் கடிதம்


மருத்துவ மேற்படிப்பில்; நீரிழிவு சிறப்பு பாடத்தை சேர்க்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் -அமைச்சர் கடிதம்
x

‘மருத்துவ மேற்படிப்பில் நீரிழிவு சிறப்பு பாடத்தை சேர்க்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்', என மத்திய மந்திரியை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

மத்திய அரசின் சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நீரிழிவு நோய்

சீனாவிற்கு அடுத்தபடியாக, உலகிலேயே அதிகளவில் நீரிழிவு நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர். 7.5 கோடி பேர் முன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மொத்தம் 7.7 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நீரிழிவு நோயின் பாதிப்பு சுமார் 10.4 சதவீதம் ஆகும். அவசரத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், இந்த முன் நீரிழிவு நோய்களில் பெரும்பாலானவை வெளிப்படையான நீரிழிவு நோயாக விரைவாக மாறுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, நமது மாநில மற்றும் மத்திய அரசுகள் தங்கள் சுகாதாரக் கொள்கைகளில் நீரிழிவு போன்ற தொற்றாத நோய்களைக் கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. எனவே, எம்.டி., (நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்) படிப்பைத் தொடங்குவதன் மூலம், நாட்டில் இந்தச் சிறப்புத் துறையில் சுகாதார வல்லுனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாட்டிலுள்ள அனைத்து சுகாதார மையங்களிலும், மத்திய அரசின், நீரிழிவு சிகிச்சை பிரிவுகளை உருவாக்கும் கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்த இது உதவும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட புற ஆஸ்பத்திரிகளிலும் நீரிழிவு சிகிச்சை பிரிவுகளை உருவாக்கவும் உதவும்.

டிப்ளமோ படிப்பு

1986-ம் ஆண்டு முதல் சென்னை மருத்துவ கல்லூரியில் உள்ள நீரிழிவு மருத்துவ பிரிவில் முழுநேர 2 ஆண்டு நீரிழிவு டிப்ளமோ படிப்பை தொடங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். இந்திய நாட்டிலேயே இன்று வரை இந்திய மருத்துவ குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே படிப்பு இதுவாகும். ஒரு புதிய எம்.டி. (நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்) பாடத்திட்டத்தை உருவாக்குவதால், ஏற்கனவே உள்ள இந்திய மருத்துவ குழுமத்தால் அங்கீகாரம் பெற்ற நீரிழிவு மருத்துவத்தில் உள்ள டிப்ளமோ இருக்கைகளை பட்டப்படிப்பு இடங்களாக மாற்ற உதவுகிறது. இதனால் தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி இந்த சிறப்பு பிரிவில் அதிக எண்ணிக்கையிலான பேராசிரியர்களை உருவாக்க உதவுகிறது.

தேசிய மருத்துவ ஆணையத்திடம்...

எம்.டி., (நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்) பாடத்திட்டத்தை பி.ஜி.எம்.இ.ஆர். அட்டவணையில் தேசிய மருத்துவ ஆணையம் சேர்த்தால், தற்போதுள்ள நீரிழிவு மருத்துவத்தில் டிப்ளமோ இருக்கைகள் எம்.டி. பட்டப்படிப்பு இடங்களாக மாற்றப்படலாம்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.டி. (நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்) பட்டப்படிப்பை தொடங்குவதற்கு பி.ஜி.எம்.இ.ஆர்.-ன் 1-வது அட்டவணையில் 'நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்' என்ற சிறப்புப் பாடத்தைச் சேர்ப்பதற்காக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்கனவே தேசிய மருத்துவ ஆணையத்திற்கு ஒரு கருத்துருவை அனுப்பியிருந்தது. தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மேற்கண்ட கருத்துருவை சாதகமாக பரிசீலித்து, டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் எம்.டி. படிப்பை தொடங்குவதற்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஆண்டு வெளியிட்ட கடிதத்தில், இப்படிப்பு தற்போதுள்ள அனைத்து படிப்புகளையும் தரமிறக்கும் என்பதால் மேற்கண்ட கோரிக்கையை ஏற்கவில்லை என தெரிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின்படி, தமிழ்நாடு அரசின் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை, தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலாளரிடம் மேற்கண்ட பரிந்துரையை சாதகமாக பரிசீலித்து, வரும் கல்வியாண்டிலேயே இப்பட்ட மேற்படிப்பை தொடங்குவதற்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மேல்முறையீடு செய்துள்ளது.

எனவே மேற்கூறிய கருத்துருவை சாதகமாகப் பரிசீலித்து, வரும் கல்வியாண்டிலேயே இப்பட்ட மேற்படிப்பை தொடங்குவதற்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story