ஆண்டிப்பட்டி பகுதியில் கடும் பனியால் செடியிலேயே கருகும் மல்லிகைப்பூ: கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை


ஆண்டிப்பட்டி பகுதியில்  கடும் பனியால் செடியிலேயே கருகும் மல்லிகைப்பூ:  கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை
x
தினத்தந்தி 2 Dec 2022 6:45 PM GMT (Updated: 2 Dec 2022 6:46 PM GMT)

ஆண்டிப்பட்டி பகுதியில் கடும் பனியால் செடியிலேயே மல்லிகைப்பூக்கள் கருகி வருகின்றன. மேலும் வரத்து குறைவால் கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தேனி

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 9 மணி வரை நீடிக்கிறது.பருவமழை பெய்ய வேண்டிய காலத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதால் விவசாயம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக மல்லிகைப்பூக்களின் விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் மொட்டுக்கள் செடியிலேயே கருகி விடுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் விளைச்சல் குறைந்ததால் ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டிற்கு மல்லிகைப்பூ வரத்து அடியோடு குறைந்தது. ஒருநாளைக்கு சராசரியாக 2 ஆயிரம் கிலோ என்ற அளவில் இருந்த மல்லிகைப்பூக்களின் வரத்து, தற்போது 10 கிலோவாக குறைந்துவிட்டது. இதன்காரணமாக மல்லிகைப்பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.4 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. முகூர்த்த நாள் வர உள்ள நிலையில் மல்லிகைப்பூ விலை மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். மல்லிகைப்பூவை போல பிச்சி மற்றும் முல்லைப்பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story