இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sep 2022 6:45 PM GMT (Updated: 28 Sep 2022 6:46 PM GMT)

கூடலூர் கல்வி மாவட்ட அலுவலகத்தை ஊட்டிக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் கல்வி மாவட்ட அலுவலகத்தை ஊட்டிக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு

மாநிலம் முழுவதும் கல்வி அலுவலர் அலுவலகங்களை மாவட்ட தலைநகரங்களுக்கு மாற்றுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதையொட்டி கூடலூர் கல்வி மாவட்ட அலுவலகம் ஊட்டிக்கு மாற்றப்பட உள்ளது. இதற்கு கூடலூர் பகுதியில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கூடலூரில் இருந்து ஊட்டிக்கு 52 கி.மீட்டர் தூரம் உள்ள நிலையில், அலுவலக பணிக்காக ஆசிரியர்களும் ஊட்டிக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது.

மேலும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஊட்டிக்கு சென்று வர முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் கூடலூர் கல்வி மாவட்ட அலுவலகத்தை ஊட்டிக்கு மாற்றக்கூடாது என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் கூடலூர் கல்வி மாவட்ட அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுனில் குமார், செந்தில் குமார், ராஜகோபால், சந்திரகுமார், ஸ்டீபன், பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:-

கூடலூரில் இருந்து ஊட்டிக்கு செல்வதற்கு ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். அரசின் அரசாணையில் இருந்து மலை மாவட்டத்திற்கு விலக்கு அளித்து, கூடலூரில் கல்வி மாவட்ட அலுவலகம் தொடர்ந்து செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story