தமிழகத்தில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்- தொல்.திருமாவளவன் பேட்டி


தமிழகத்தில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்-  தொல்.திருமாவளவன் பேட்டி
x

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறினார்

தூத்துக்குடி

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

பேட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. கனியாமூர் சம்பவத்தில் மாணவி சாவுக்கு நீதி வேண்டும். அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் உளவுத்துறை மற்றும் போலீஸ் துறை விழிப்பாக செயல்பட்டிருந்தால் கலவர சம்பவங்கள் நடந்திருக்காது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

தனி கண்காணிப்பு

இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும். தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு தொடர்பாக அரசின் கட்டுப்பாட்டில் தனி கண்காணிப்பு கொண்டுவர வேண்டும். அதற்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமரை அமர வைத்து தமிழர்களின் பாரம்பரியம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் பாடம் எடுத்து இருக்கிறார். என்.எல்.சி. நிறுவனத்தில் பொறியாளர் தேர்வில் தமிழர் ஒருவர் கூட இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற அடுத்தக்கட்ட நடவடிக்கையை என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

மின்கட்டணம்

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து மின்துறை அமைச்சர் விளக்கி இருக்கிறார். அந்த கருத்தை நியாயப்படுத்த முடியாது. சாதாரண எளிய மக்களை பாதிக்காத வகையில் மின்கட்டணம் இருக்க வேண்டும். மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொடியேற்றினார்

தொடர்ந்து தொல்.திருமாவளவன் சாத்தான்குளத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு, நெல்லை மாவட்ட எல்லையான இட்டமொழிக்கு நேற்று மதியம் வருகை தந்தார். அங்கு தொண்டர்கள் வரவேற்றனர். பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தனர். தொடர்ந்து மன்னார்புரம் ஜங்ஷன் இந்திராநகரில் கட்சி கொடியேற்றினார். மேலும் ஒரு குழந்தைக்கு தமிழ்ஆதவன் என்று பெயர் சூட்டினார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில துணைச்செயலாளர் மணிமாறன், தெற்கு மாவட்ட அமைப்பாளர் முருகன், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் மன்னர்மன்னன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story