ஐ.டி. ஊழியர், ஆசிரியரிடம் ரூ.19¾ லட்சம் மோசடி


ஐ.டி. ஊழியர், ஆசிரியரிடம் ரூ.19¾ லட்சம் மோசடி
x

ஆன்லைனில் பகுதிநேர வேலை தருவதாகக் கூறி ஐ.டி. ஊழியர், தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.19¾ லட்சம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூர்

ஐ.டி. ஊழியர்

காட்பாடி தாலுகா சேவூரை சேர்ந்த ஐ.டி.ஊழியர் ஒருவர் கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்தபடி பணிபுரிந்து வருகிறார். இவருடைய வாட்ஸ்-அப் எண்ணிற்கு கடந்த மாதம் 24-ந் தேதி ஆன்லைனில் பகுதிநேர வேலை உள்ளதாகவும், அதில் சேர விரும்பினால் இணைப்பில் (லிங்க்) சென்று விவரங்களை பதிவு செய்யவும் என்று குறுந்தகவல் ஒன்று வந்தது.

இதையடுத்து அவர் அந்த இணைப்பில் சென்று தன்னுடைய விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்துள்ளார். சிறிதுநேரத்தில் டெலிகிராமில் குறுந்தகவல் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர்கள் ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான வேலை என்று கூறி அவரின் பெயரில் புதிதாக கணக்கு ஒன்று தொடங்கினர்.

ரூ.13½ லட்சம் மோசடி

அந்த கணக்கில் குறிப்பிட்ட தொகை செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும். அதிக பணம் செலுத்தி இலக்கை அடைந்தால் அதிகளவு ஊக்கத்தொகை பெறலாம் என்று மர்மநபர்கள் தெரிவித்தனர். இதனை உண்மை என்று நம்பிய அவர் 3 கட்டங்களாக ரூ.13 லட்சத்து 64 ஆயிரம் செலுத்தினார். அதற்கு ஊக்கத்தொகையாக சில லட்சங்கள் அவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது போன்று காட்டியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அந்த பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் பணத்தை எடுக்க முடியவில்லை. அப்போதுதான் ஐ.டி. ஊழியருக்கு ஆன்லைனில் மர்மநபர்கள் பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது.

சைபர் கிரைம் போலீசார் விசாரணை

இதேபோன்று வேலூர் தொரப்பாடியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியரிடமும் மர்மநபர்கள் ஆன்லைனில் பகுதிநேர வேலை உள்ளதாக கூறி கடந்த மாதம் 30, 31-ந் தேதிகளில் ரூ.6 லட்சத்து 15 ஆயிரத்தை மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து ஐ.டி. ஊழியர், தனியார் பள்ளி ஆசிரியர் ஆகியோர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story