கருணாநிதி நூற்றாண்டு விழா: சிறப்பாகக் கொண்டாட குழு அமைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


கருணாநிதி நூற்றாண்டு விழா: சிறப்பாகக் கொண்டாட குழு அமைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
x

சிறப்பாகக் கொண்டாட குழுக்கள் அமைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

கருணாநிதி நூற்றாண்டு விழாவினை சிறப்பாகக் கொண்டாட குழுக்கள் அமைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவரும், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழகத்தின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் திகழ்ந்த நூற்றாண்டு நாயகர் கருணாநிதியின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழகத்தின் வருங்காலத் தலைமுறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் ஜுன் 2023 திங்கள் முதல் ஜுன் 2024 திங்கள் வரை தமிழக அரசால் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழக அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22.5.2023 அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதல்வர், நவீனத் தமிழகத்தை உருவாக்கிய சிற்பி கருணாநிதியை பெருமைப்படுத்தும் விழாக்களாக மட்டுமல்லாமல், அவர் தமிழக மக்களின் நலனிற்காக அறிவித்து, நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த விழாக்கள் அமைய வேண்டும் என்றும், மாதந்தோறும் ஒவ்வொரு பொருளின் அடிப்படையில் இந்த விழாக்களை நடத்திட வேண்டும் என்றும், பெரிய அளவிலான விழாக்களாக மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கும் விழாக்களாக இவற்றை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், அரசு நடத்துவதாக மட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடுவதாக அமைய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, 2.6.2023 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு, அவர் தமிழக மக்களின் நலனிற்காக ஆற்றிய பணிகள், நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த குறும்படத்தையும் வெளியிட்டார். கருணாநிதி பல்வேறு திறமைகள் கொண்ட பன்முக வித்தகர். அவர் தமிழகத்திற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரின் பரிமாணங்களை போற்றும் வகையில் இதழாளர் – கருணாநிதி, எழுத்தாளர் – கருணாநிதி, கலைஞர் - கருணாநிதி, சமூக நீதிக் காவலர் - கருணாநிதி, பண்பாட்டுப் பாசறை - கருணாநிதி, ஏழைப் பங்காளர் - கருணாநிதி, சட்டமன்ற நாயகர் - கருணாநிதி, பகுத்தறிவு, சீர்திருத்தச் செம்மல் - கருணாநிதி, நவீன தமிழகத்தின் சிற்பி - கருணாநிதி, நிறுவனங்களின் நாயகர் – கருணாநிதி, தொலைநோக்குச் சிந்தனையாளர் - கருணாநிதி, தமிழ்த்தாயின் தவப்புதல்வன் – கருணாநிதி இத்தலைப்புகளில் அமைச்சர்கள் தலைமையில் இணைத் தலைவர்கள், உறுப்பினர் செயலர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட 12 குழுக்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இக்குழுக்கள் கருணாநிதியின் பன்முகத்தன்மையை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோருடன் இணைந்து எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் விழாக்களாக அமைய வேண்டும் என்பதற்கான திட்டப் பணிகளை மேற்கொண்டு, அரசுடன் இணைந்து விழாக்களை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story