கோவில்பட்டி, சாத்தூர் பகுதி தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு17 சதவீதம் தீபாவளி போனஸ்


கோவில்பட்டி, சாத்தூர் பகுதி தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு17 சதவீதம் தீபாவளி போனஸ்
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:45 PM GMT)

கோவில்பட்டி, சாத்தூர் பகுதி தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 17 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் மின் பயன்பாட்டு சிக்கன விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பொது மகா சபை கூட்டம் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் சொர்ணலதா தலைமை தாங்கினார். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவன் முன்னிலை வகித்தார். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் வரவேற்று பேசினார். இதில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற தீப்பெட்டி உரிமையாளர்கள் மகாசபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் ரூ.20-க்கு குறைந்த சீனா சிகரெட் லைட்டர்களை விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ள போதிலும், நேபாளம் வழியாக சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டு ஏகபோகமாக விற்பனையாகி கொண்டிருக்கிறது. இதனால், சந்தையில் தீப்பெட்டி பண்டல்களில் விலையையும் அதிகரிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. நெருக்கடியான சூழலிலும் 4 லட்சம் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டை போல 12 சதவீதத்தில் இருந்து 17சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும். மேலும், தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த 40 சதவீத கூலியை வழங்குவதற்குவது தொடர்பாக பிற சங்கங்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும், என்றார்.

கூட்டத்தில் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுரேஷ், சாத்தூர் கிளை தலைவர் லட்சுமணன், துணைத் தலைவர் கோபால்சாமி, இணைச் செயலாளர் சின்னகொம்பையா, செல்வ மோகன், சாத்தூர் பெருமாள் சாமி, நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீப்பட்டி உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஜோசப் ரத்தினம் நன்றி கூறினார்.


Next Story