நஞ்சராயன் குளத்தில் பறவைகளை காண திரண்ட பள்ளி மாணவர்கள்


நஞ்சராயன் குளத்தில் பறவைகளை   காண திரண்ட பள்ளி மாணவர்கள்
x
திருப்பூர்


ஊத்துக்குளி அருகே உள்ள நஞ்சராயன் குளம் சில மாதங்களுக்கு முன்பு பறவைகள் சரணாலயமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று குளத்திற்கு வருகை தந்த பள்ளி மாணவர்கள் வெளிநாட்டு பறவைகளை ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

நஞ்சராயன் குளம்

ஊத்துக்குளி அருகே சுமார் 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. இதில் சுமார் 280 ஏக்கர் பரப்பளவில் மீன் பிடிப்பு பகுதியாக நீர் நிறைந்து காணப்படுகிறது.

நஞ்சராயன் குளத்திற்கு உள்நாட்டு பறவைகள் மட்டுமல்லாது ஏராளமான வெளிநாட்டு பறவைகளும் குளிர்கால வலசை வந்து செல்கின்றன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் வலசை வரும் பறவைகள் மார்ச் மாதம் வரை இங்கு தங்கியிருந்து பின்னர் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்ப செல்லும்.

பொதுவாக வட துருவத்தில் வாழும் பறவைகள் குளிர்காலத்தில் இரை தேடவும் கடும் குளிரில் இருந்து தப்பிப்பதற்காக மிதவெப்ப நாடுகளான இந்தியா போன்ற துணை கண்டங்களுக்கு வந்து செல்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் எந்தெந்த பறவைகள் வந்துள்ளன என கண்காணிப்பது நடைமுறை.அந்த வகையில் நஞ்சராயன் குளத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் என இதுவரை 181 பறவை இனங்கள் வந்துள்ளன.

வெளிநாட்டு பறவைகள்

உள்நாட்டு பறவைகளான கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, பழுப்பு நாரை, செந்நீல நாரை, பெரிய கொக்கு, நடுத்தர கொக்கு, சிறிய கொக்கு, உண்ணி கொக்கு, மடையான், ராக்கொக்கு, சிறிய நீர்காகம், நடுத்தர நீர்காகம், பளபளக்கும் அருவாள் மூக்கன், நீல தாழைக்கோழி, தென் சிட்டு, நெடுங்கால உள்ளான், கானாங்கோழி, புள்ளி மூக்குவாத்து, புள்ளிப்புறா, மாடப்புறா, பட்டைக்கழுத்து புறா போன்ற பறவைகளும் வெளிநாட்டு பறவைகளான தட்டை வாயன், நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, கிளுவை போன்ற வாத்துகளும் கடற்பறவைகள் ஆன மண்கொத்தி, சதுப்பு மண்கொத்தி, பொரி மண்கொத்தி, சிறியபட்டாணி, உப்புக்கொத்தி, சிறிய கொசு உள்ளான், பவழக்கால் உள்ளான், பேதை உள்ளான், டெமினிக் கொசு உள்ளான், கருவால் உள்ளான் போன்ற பறவைகள் இதுவரை ஏராளமானவை வந்துள்ளன. இதனை நேற்று ஊத்துக்குளி அருகே செயல்படும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர்.

இயற்கை கழக தலைவர்

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குளத்தினை பற்றியும் பறவைகளைப் பற்றியும் திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன், திருப்பூர் வனத்துறை அதிகாரி சுரேஷ் கிருஷ்ணன் விளக்கி கூறினார்.

மேலும் பறவைகள் சரணாலயத்திற்கு தேவையான பார்வையாளர்கள் மாடம், பறவைகள் விளக்க கூடம் அமைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு பறவைகளைப் பற்றிய விளக்கப்படங்கள் விரைவில் அமைக்கப்பட வேண்டும் எனவும,் குளத்திற்குள் மணல் திட்டுகள் புல்வெளி திட்டுகள் அமைக்கப்பட்டு அதிக அளவில் பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் மாணவர்கள் பறவைகளைப் பற்றி அதிக அளவில் கற்பதற்கு ஏதுவாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story