லாரி மோதி பள்ளி மாணவன் பலி


லாரி மோதி பள்ளி மாணவன் பலி
x

லாரி மோதி பள்ளி மாணவன் பலியாகினர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், கோப்பிலியன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சக்தி (என்கிற) சக்திவேல் மகன் சந்தோஷ்(வயது 15). அரியலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது உறவினர்கள் அதே ஊரைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சதீஷ் (என்கிற) பாரதிமோகன்(24). எலக்ட்ரீசியன். தஞ்சை மாவட்டம் வல்லம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் மகன் தினேஷ்(17). 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு கோப்பிலியன் குடிகாடு கிராமத்தில் இருந்து வி.கைகாட்டி பேக்கரி கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். பின்னர் வி.கைகாட்டியில் இருந்து கோப்பிலியன்குடிகாடு கிராமத்திற்கு செல்ல வி.கைகாட்டி-அரியலூர் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டு விட்டு அரியலூர் சாலையில் இடதுபுறம் சென்றுகொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சதீஷ் ஓட்டி சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே சந்தோஷ் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த சதீஷ், தினேஷ் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரி கண்ணாடியை உடைத்து சூறையாடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம், கயர்லாபாத் போலீசார் பொதுமக்களிடம் பேசி சமாதானம் செய்தனர். தொடர்ந்து சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிந்த விக்கிரமங்கலம் போலீசார் லாரி டிரைவர் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தேவன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் வீரமணி (42) என்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story