வரி, வாடகை பாக்கியை செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை


வரி, வாடகை பாக்கியை செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Dec 2022 6:45 PM GMT (Updated: 20 Dec 2022 6:45 PM GMT)

மயிலாடுதுறை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, வாடகை பாக்கியை செலுத்தாதவர்ள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, வாடகை பாக்கியை செலுத்தாதவர்ள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், காலிமனை வரி, கடை வாடகை, குத்தகை தொகை என்று ரூ.21 கோடியே 21 லட்சத்து 54 ஆயிரம் பாக்கி உள்ளது.இந்த நிலையில் நீண்டகாலமாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவையில் வைத்திருப்பவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமை தாங்கினார். நகராட்சி மேலாளர் நந்தகுமார், வருவாய் அலுவலர் செல்வி, தலைமை எழுத்தர் தினகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி பேசும் போது கூறியதாவது:-

59 சதவீதம் சொத்து வரி

மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகளில் வணிக பயன்பாட்டில் உள்ள நிறுவனங்கள் தான் வரி மற்றும் வரியில்லா இனங்கள் செலுத்தாமல் அதிக அளவில் பாக்கி வைத்துள்ளன. நடப்பாண்டில் சொத்துவரி மட்டும் 50 சதவீத அளவில் செலுத்தப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்டவை பெருமளவில் செலுத்தப்படவில்லை.வரி வருவாய் முழுமையாக செலுத்தினால்தான் நகராட்சி மூலம் வளர்ச்சி திட்டங்கள், அடிப்படை பணிகள் மேற்கொள்ள முடியும். எனவே வணிகர்கள், பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வாடகை இனங்களை உரியகாலத்தில் முறையாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சட்டப்படி நடவடிக்கை

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வாடகை பாக்கி செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதில் நகராட்சி கவுன்சிலர்கள் ரஜினி, காந்தி, செந்தில், ஹேமாவதி உள்பட வணிகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.


Next Story