மீண்டும் சொல்கிறேன்... நிர்மலா சீதாராமனின் 'மரியாதைக்குரிய' அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை - உதயநிதி ஸ்டாலின் பதிலடி


மீண்டும் சொல்கிறேன்... நிர்மலா சீதாராமனின் மரியாதைக்குரிய அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை - உதயநிதி ஸ்டாலின் பதிலடி
x
தினத்தந்தி 22 Dec 2023 3:44 PM GMT (Updated: 22 Dec 2023 4:04 PM GMT)

தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் மழை வெள்ளத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கான மீட்பு பணிக்காக, மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி கோரியிருந்தது. அப்போது, மத்திய அரசு நிதி வழங்குவது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையானது.

இதற்கிடையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவருக்கு உரிய மரியாதையை கொடுக்கத்தானே செய்கிறோம். அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு நல்லதல்ல. வகிக்கும் பதவிக்கு ஏற்ற அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரவேண்டும். இதை பொதுவாகவே சொல்கிறேன். அவர் மீது எந்த காழ்ப்புணர்வுடனும் இதை கூறவில்லை" என கூறினார்.

இந்த நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

" யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.

சிலரிடம் அண்ணாவைப் போல - சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது.

வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால், "நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ" என மத்திய மந்திரி ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, 'அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்" என்று கூறினேன்.

என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மத்திய மந்திரி அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த 'மரியாதையுடன்' கேட்டுக்கொண்டேன். ஆனாலும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 'பாஷை' குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.

மீண்டும் சொல்கிறேன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் 'மரியாதைக்குரிய' அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.

வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம்.

நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் 'மரியாதை' தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது 'அக்கறை' வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மத்திய நிதி மந்திரி அவர்களே!"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story