சுயதொழில் தொடங்க கடன் மேளா; நாளை நடக்கிறது


சுயதொழில் தொடங்க கடன் மேளா; நாளை நடக்கிறது
x

சுயதொழில் தொடங்க கடன் மேளா நாளை நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழிற்கடன், தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுகடன் மற்றும் கறவை மாடு வாங்க கடனுதவி பெற விரும்புபவர்கள், மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ-மாணவிகள் உயர் கல்வி பயில்வதற்கான கல்வி கடன் பெற விரும்புபவர்கள் நாளை (புதன்கிழமை) கூவத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெறவுள்ள கடன் மேளாவில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் வருகிற 12-ந்தேதி கோட்டியால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 19-ந்தேதி செந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 26-ந்தேதி கீழப்பழுவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் கடன் மேளா நடைபெறுகிறது. இதில் கடன் பெற பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மக்களாக இருக்க வேண்டும். 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மேலும் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும். கடன் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், சாதி சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் திட்ட தொழில் அறிக்கை ஆகியவை இணைக்கப்பட வேண்டும். அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story