சென்னை அரும்பாக்கத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி காதல் ஜோடி உடல் நசுங்கி சாவு


சென்னை அரும்பாக்கத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி காதல் ஜோடி உடல் நசுங்கி சாவு
x

மோட்டார் சைக்கிள் மீது டிரெய்லர் லாரி மோதியதில் லாரி சக்கரத்தில் சிக்கி காதல் ஜோடி உடல் நசுங்கி பலியானார்கள். விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இருவரும் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்தவர் பாபிலோனா (வயது 23). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் விநாயகபுரம் பகுதியில் அறை எடுத்து தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவர், ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியை சேர்ந்த பிரசாத் (32) என்பவரை காதலித்து வந்தார். பிரசாத், அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் தங்கி, குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் டிசைனிங் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

திருமணத்துக்கு சம்மதம்

இவர்களின் காதலுக்கு இருவரது வீட்டிலும் பச்சை கொடி காட்டினர். இதையடுத்து இருவீட்டு பெரியோர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது உறவினர் வீட்டில் இருந்த பாபிலோனாவை, பிரசாத் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு அவரது அறையில் விடுவதற்காக சென்று கொண்டிருந்தார்.

லாரி சக்கரத்தில் சிக்கி பலி

அரும்பாக்கம், மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சாலை வளைவில் திரும்ப முயன்றபோது கோயம்பேட்டில் இருந்து வடபழனி நோக்கி இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த டிரெய்லர் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது இவர்கள் மீது டிரெய்லர் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் காதல் ஜோடியான பிரசாத்-பாபிலோனா இருவரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

உறவினர்கள் சோகம்

இது குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கு காரணமான டிரெய்லர் லாரி டிரைவரான வந்தவாசியை சேர்ந்த பொன்னன் (36), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காதல் ஜோடிக்கு விரைவில் திருமணம் நடைடெபற இருந்த நிலையில் விபத்தில் சிக்கி 2 பேரும் பலியான சம்பவம் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story