ரத்த காயங்களுடன் ஆண் பிணம்


ரத்த காயங்களுடன் ஆண் பிணம்
x

வேப்பூர் அருகே ரத்த காயங்களுடன் ஆண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர்

ராமநத்தம்,

ஆண் பிணம்

வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள், இதுபற்றி வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா, வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த நபரின் உடலை பார்வையிட்டதுடன், அவர் யார்? என அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

யார் அவர்?

இதனிடையே போலீசார், இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மமான முறையில் இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாரேனும் கொலை செய்து சாலையோரம் வீசிச் சென்றார்களா? அல்லது வாகன விபத்தில் சிக்கி இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story