கதர், கிராமப்பொருட்கள், பனைப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை -அமைச்சர் அறிவுறுத்தல்


கதர், கிராமப்பொருட்கள், பனைப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை -அமைச்சர் அறிவுறுத்தல்
x

கதர், கிராமப்பொருட்கள், பனைப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவுறுத்தினார்.

சென்னை,

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கதர் கிராமத் தொழில் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து குறளகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

வாரியப் பொருட்கள் தரமாக உள்ளதை கருத்திற்கொண்டு அதனை மக்களிடையே பிரப்பலப்படுத்தி விற்பனையினை அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். குறளக கட்டிடத்தினை அகற்றி புதிய நவீன பன்னடுக்கு கட்டிடமாக அறிவிக்கப்பட்டதைத் செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது.

புதிதாக பொறுபேற்றிருக்கும் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் வியாபார அபிவிருத்திற்கு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டியதோடு அதனை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இவ்வாரியத்தில் தற்சமயம் குறைந்த பணியாளர்கள் பணியாற்றுவதை கருத்தில் கொண்டு பணியில் உள்ளோர்கள் சிரமமான சூழ்நிலை இருந்தாலும் அதனை நேர்மறையான அணுகுமுறையை கையாண்டு வாரிய வருவாயினை அதிகரிக்கக்கூடிய வகையில் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

விற்பனையை அதிகரிக்க திட்டம்

சென்ற வருடங்களைக் காட்டிலும், இந்நிதியாண்டில் கதர், கிராமப்பொருட்கள், பனைப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு இலக்கினை அடைந்திட அறிவுறுத்தப்பட்டது.

மேலும், வரும் தீபாவளி போன்ற விழாக்காலங்களில் மக்களுக்கு தேவைப்படுவதை முன்னரே கண்டறிந்து, நவீன காலத்திற்கேற்றவாறு யுக்திகளை கையாண்டு தரமான பொருட்களை விற்பனைக்கு கொண்டுவரவும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர் சீ.சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story