அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு செப்.15-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு


அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு செப்.15-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 28 Aug 2023 9:16 AM GMT (Updated: 28 Aug 2023 9:47 AM GMT)

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு செப்.15-ந் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது. செந்தில் பாலாஜியிடம் ஐந்து நாட்கள் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் எல்.எல்.ஏ., எம்.பி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இரு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதனை கேட்ட நீதிபதி அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த காவல் நீட்டிப்புக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக தேவையில்லை எனவும் காணொலி வாயிலாக ஆஜாரனால் போதுமானது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.


Next Story