சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் விஷ்ணு தகவல்


சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் விஷ்ணு தகவல்
x

சிறுபான்மையின மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

சிறுபான்மையின மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

கல்வி உதவித்தொகை

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் மாநில, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் நடப்பு கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகையும், பிளஸ்-1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மேல் படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழில் கல்வி, தொழில் நுட்ப கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கலாம்

இதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியான மாணவ -மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரையும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைகளுக்கு அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரையிலும் இந்த இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க முடியும். புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ- மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு...

இந்த திட்டம் தொடர்பாக இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை இன நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த கல்வி உதவி தொகையை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடைய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story