நொய்யல் ஆற்றில் மழைநீருடன் சாயக்கழிவுநீர் கலப்பு


நொய்யல் ஆற்றில் மழைநீருடன் சாயக்கழிவுநீர் கலப்பு
x

நொய்யல் ஆற்றில் மழைநீருடன் சாயக்கழிவுநீர் கலப்பதால் விளைபயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கரூர்

நொய்யல் ஆறு

நொய்யல் ஆறு கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் தொடங்கி, திருப்பூர் மாவட்டம் வழியாக கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. நொய்யல் ஆற்றில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளில் தேக்கி வைத்திருந்த சாயப்பட்டறை கழிவுநீரை ஒவ்வொரு முறையும் நொய்யல் ஆற்றில் மழைநீர் வரும்போது மழைநீருடன் கலந்து விடுவது வழக்கம்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. இதை பயன்படுத்தி திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள் சாயக்கழிவு நீரை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். நொய்யல் ஆற்றில் வரும் மழைநீர் சாயக் கழிவுநீருடன் சேர்ந்து கரும் பச்சை நிறத்தில் வருகிறது. நொய்யல் ஆற்றில் இருந்து காவிரி ஆற்றில் கலக்கும்போது நொய்யல் ஆற்று வெள்ளநீர் பச்சைப்பசேர் என்று கலக்கிறது. தற்போது மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு காவிரியில் சென்று கொண்டிருக்கிறது.

சாயக்கழிவுநீர் கலப்பு

நொய்யல் ஆற்றில் வரும் சாயக்கழிவுநீர் காவிரியில் கலந்து செல்கிறது. நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் வருவதால் நொய்யல் ஆற்றில் இருந்து பாசனம் செய்யும் விவசாயிகள் இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் நொய்யல் ஆற்றையொட்டி உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் கிணறுகளில் உள்ள குடிநீரும் சாயக்கழிவு நீரால் மாசுபட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் குளித்து செல்லும்போது உடலில் ஒரு விதமான அரிப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர். மேலும் தண்ணீரில் தொடர்ந்து குளித்து வந்தாலும், இத்தண்ணீரை அருந்துவதாலும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வரும் நிலை ஏற்பட்டது.

நிவாரணம் வேண்டும்

மேலும் இதுகுறித்து நொய்யல் ஆற்று பாசன விவசாயிகள் கூறியதாவது:- தற்போது நொய்யல் ஆற்றில் வரும் வெள்ள நீரை பரிசோதனை செய்ததில் இதன் உப்புத் தன்மை 2,100 டிடிஎஸ் என உள்ளது. அதேபோல் கடந்தாண்டுகளில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நீரை பரிசோதனை செய்தபோது, உப்புத்தன்மை 68 டிடிஎஸ் என இருந்தது. ஒவ்வொரு முறையும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளில் தேக்கி வைத்திருக்கும் சாயக்கழிவு நீரை திறந்து விடுகின்றனர்.

இதனால் தண்ணீரில் உள்ள உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் பணப்பயிர்கள் காய்ந்து வருகின்றன. விவசாயம் செய்ய உகந்த தண்ணீரல்ல. எனவே மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் மற்றும் மாசுகட்டுபாட்டுத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட நொய்யல், காவிரி ஆற்று பாசன விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story