கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக்கொலை


கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக்கொலை
x

கொட்டாம்பட்டி அருகே பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொலை

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வைரவன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் பெரியகருப்பன்(வயது 20). விவசாய கூலி வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் மொல்லமலை அடிவாரத்தில் நேற்று பெரிய கருப்பன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கொட்டாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன் மற்றும் கொட்டாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு உடலில் பல இடங்களில் காயங்களுடன் கிடந்த பெரியகருப்பன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

பின்னர் வாலிபர் கொலை பற்றி பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த தனசேகரன் மனைவி முத்துச்செல்விக்கும், வாலிபர் பெரியகருப்பனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதையறிந்த தனசேகரனுக்கும், பெரியகருப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டதால் முத்துச்செல்வி கோபித்து கொண்டு சிவகங்கை அருகே உள்ள பத்துபட்டியில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

பேச்சுவார்த்தை

இந்தநிலையில் தனசேகரன், மதுரை சக்கிமங்கலத்தில் உள்ள உறவினரான பிச்சைப்பாண்டி என்பவரிடம் பெரிய கருப்பனை தீர்த்துக்கட்ட உதவி கேட்டுள்ளார். அவர் சக்கிமங்கலத்தில் இருந்து 4 பேரை அழைத்துகொண்டு வைரவன்பட்டிக்கு வந்தார். பின்னர் தனசேகரன், பிச்சைபாண்டி 2 பேரும் மது குடிக்கலாம் என பெரியகருப்பனை அழைத்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் அவர்கள் 3 பேரும் கருங்காலக்குடிக்கு வந்தனர்.

அங்கு மது வாங்கி கொண்டு மொல்லா மலையடிவாரத்திற்கு சென்று மதுகுடித்து உள்ளனர். மேலும் சக்கிமங்கலத்தில் இருந்த வந்தவர்களும் அங்கு வந்தனர். பின்னர் மதுபோதையில் இருந்த அவர்கள் பெரியகருப்பனிடம் கள்ள தொடர்பை விட்டுவிடுமாறு கூறினர். அதற்கு அவர் மறுக்கவே அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தனசேகரன் உள்பட அவரது நண்பர்கள் சேர்ந்து கம்பு மற்றும் கையால் பெரியகருப்பனை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

கைது

இதையடுத்து போலீசார் தனசேகரன் (வயது32), பிச்சைப் பாண்டி (27), மாதவன்(20), 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story