வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா: அபிராமி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்


வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா: அபிராமி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்
x

சென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் 4-ம் நாளான நேற்று, அபிராமி அம்மன் அலங்காரத்தில் கொலு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்மனை பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டு சென்றனர்.

சென்னை,

சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 'சக்தி கொலு' என்ற பெயரில் 9 படிகள் கொண்ட பிரமாண்ட கொலு கோவிலின் 4 திசைகளிலும் வைக்கப்பட்டு உள்ளது. சக்தி கொலுவின் 2-ம் நாளில் மீனாட்சி அம்மன் அலங்காரமும், 3-ம் நாளில் அன்னபூரணி அம்மன் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நவராத்திரி திருவிழாவின் 4-ம் நாள் நிகழ்வு நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை லலிதா சகஸ்ரநா பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீருத்ரம், சமஹம், ஸ்ரீசுக்தம் நடந்தது.

அபிராமி அம்மன் அலங்காரம்

இதில் அபிராமி அம்மன் அலங்காரத்தில் கொலு அமைக்கப்பட்டது. இந்த கொலுவை பழம்பெரும் நடிகை சச்சு, கோவில் அர்ச்சகர்களின் இல்லத்தரசிகள் ஆகியோர் இணைந்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று அபிராமி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை மனமுருக வழிபட்டனர்.

சக்தி கொலுவில் கிருஷ்ணரின் உபதேசங்கள் ஒலி வடிவில் ஒலிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கொலு பாட்டு, ரமணனின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன. தினந்தோறும் கொலுவுக்கு வரும் முதல் 250 பேருக்கு சுமங்கலி செட் பிரசாதமும், அம்மன், முருகன் கோவில்கள் அடங்கிய புத்தகமும் வழங்கப்பட்டு வருகின்றன.

நவராத்திரி திருவிழா அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் செய்து வருகிறார்.


Next Story