குறிஞ்சிப்பாடி அருகே கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்து மாணவன் பலி


குறிஞ்சிப்பாடி அருகே  கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்து மாணவன் பலி
x
தினத்தந்தி 16 Oct 2022 6:45 PM GMT (Updated: 16 Oct 2022 6:45 PM GMT)

குறிஞ்சிப்பாடி அருகே கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்து மாணவன் உயிரிழந்தான்.

கடலூர்

குறிஞ்சிப்பாடி,

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கள்ளையங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் தரணிதரன்(வயது 13). இவன் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலையில் தரணிதரன் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது கிராம நிா்வாக அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து தரணிதரன் மீது விழுந்தது.

மாணவன் பலி

இதில் பலத்த காயமடைந்த அவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தரணிதரன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


Next Story