என்.எல்.சி. நிறுவனத்தை மூட தமிழ்நாடு அரசு ஆணையிடவேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


என்.எல்.சி. நிறுவனத்தை மூட தமிழ்நாடு அரசு ஆணையிடவேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

என்.எல்.சி. நிறுவனத்தை மூட தமிழ்நாடு அரசு ஆணையிடவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஆணையிடக்கோரி அந்த நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 'ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மீண்டும் அனுமதிக்கமுடியாது' என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. இந்த நிலைப்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது.

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, என்.எல்.சி. சுரங்கங்கள் மற்றும் அனல் மின்நிலையங்களால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க மறுப்பது ஏன்?. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், என்.எல்.சி.யால் நிலத்தடி நீர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு வெள்ளூரில் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 250 மடங்கு பாதரசம் கலந்திருக்கிறது. சிறுநீரகம், தோல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.

மூட ஆணையிடவேண்டும்

இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் என்.எல்.சியால் ஏற்பட்ட சீர்கேடுகளையும், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏற்பட்ட சீர்கேடுகளையும் ஒப்பிடவே முடியாது. கடலூரை கடந்து அண்டை மாவட்டங்களிலும் என்.எல்.சி நிறுவனத்தால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏற்பட்டது அழிவு என்றால், என்.எல்.சி.யால் நிகழ்ந்து கொண்டிருப்பது பேரழிவு ஆகும். இது தடுக்கப்படவேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஒரு நீதி. என்.எல்.சி.யால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்ட மக்களுக்கு ஒரு நீதி என்பது பெரும் அநீதி. மண்ணுக்கும், மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நிறுவனங்கள் எவையாக இருந்தாலும் அவை மூடப்படவேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அவை அனைத்தும் என்.எல்.சி.க்கும் பொருந்தும். எனவே, இனியும் தாமதிக்காமல் என்.எல்.சி. நிறுவனத்தை மூட தமிழ்நாடு அரசு ஆணையிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story